சென்னை செந்தமிழ் முழுவதும் மறவேன் !
பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்று யோசித்தபோது இதுதான் தோன்றியது. கிடைத்த நேரத்தில் ப்ளஸ் ,பேஸ்புக் பக்கமாக நம்மை ஒரு கும்பலே தள்ளிக்கொண்டு போயி தங்களுடன் கூடி குலவி கும்மி அடிக்க விட்டுவிடுவதால் ப்ளாக் பக்கம் வருவது குறைந்து போவதால் வருத்தம். இருக்காதா பின்னே, தமிழ் ப்ளாக் தானே நம்மை இங்கு ஒன்று சேர்த்து வைத்தது.அந்த நன்றிக்காவது எழுதவேண்டுமே! பேஸ் புக்கில் நட்புகளுடன் வம்பு மடத்தில் நான் இந்த பெருமை மிகு "சென்னை தமிழில் "எழுதிதான் எல்லோரையும் கடுப்பேற்றிக்கொண்டு இருக்கிறேன்.உண்மையில் என்னை சென்னை தமிழில் எழுத வைத்தது என் சென்னை வழக்கை மட்டுமல்ல அன்பு நண்பர் "அதே கண்கள் "ஆனந்த் ராஜ் அவர்கள் தான்.தன் பதிவுகள் அனைத்தும் மெட்ராஸ் தமிழில் எழதிய ஒரே பதிவர்."தருமமிகு சென்னையின் "அந்த தமிழின் சிறிய வரலாறு இது. கிடைத்த இடம் - தமிழ் விக்கிப்பீடியா.
சென்னைத் தமிழ் அல்லது மெட்ராஸ் பாஷை (Madras Tamil , Madras bashai) என்பதுசென்னை மாநகரில் பேசப்பட்டு வந்த பிற மொழிச் சொற்கள் கலந்த தமிழாகும். இது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்று. அதிகளவிலான தமிழர்கள் சென்னையில் குடியேறியதால், இவ்வகையான கலப்புச் சொற்கள் குறைந்து வருகின்றன. தற்போது சென்னையில் வசிக்கும் பெரும்பான்மையினர் இவ்வழக்கைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், சில சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. நகைச்சுவையின் பொருட்டு சிலர் இச்சொற்களைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவர். இதற்கு மாற்றாக ஆங்கிலம் கலந்த தமிழான தமிங்கிலம் என்ற வழக்கு பரவி வருகிறது.
இன்னாபா... ஷோக்கா கீறியா?... நாஸ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட மெட்ராஸ் மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.
மெட்ராஸ் பாஷையின் அழகே அதன் வேகமும், எளிமையும்தான். ஆங்கிலம், தெலுங்கு, உருது என இந்த பகுதியில் புழங்கிய அனைத்து மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து தமிழோடு பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ்சோறு மொழிதான் மெட்ராஸ் பாஷை. எவ்வளவு பெரிய சொற்றொடரையும் அப்படியே நசுக்கி பிசுக்கி ஒற்றைச் சொல்லாய் வார்த்து எடுக்கிற வார்த்தைச் சித்தர்களால் உருவானதுதான் இந்த அழகிய மொழி.
உதாரணத்திற்கு, 'இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு'என்பதை மெட்ராஸ் பாஷையில் ரத்தினச் சுருக்கமாக 'இட்டாந்துடு'என்று சொல்லிவிடலாம். அதேசமயம் 'இட்டுக்குனு வா'என்பதற்கும் 'இஸ்துகுனு வா'என்பதற்கும் கடலளவு வித்தியாசம் இருக்கிறது. முன்னது அழைத்துக் கொண்டு வருவது, பின்னது இழுத்துக் கொண்டு வருவது. இந்த வார்த்தை விளையாட்டுகள் தமிழோடு நின்றுவிடுவதில்லை. ஆங்கிலத்தின் பங்களிப்பும் இதில் பெருமளவு இருக்கிறது.
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய ரிக்ஷாக்காரர்கள்தான் மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள். உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா... என அலுத்துக் கொள்பவர்கள் அதற்குள் ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை, இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல, ரிக்ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger-ஐ, நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள். இவை போக பக்கெட்டு (BUCKET), பாமாயிலு (PALM OIL), பிஸ்கோத்து (BISCUIT), என நிறைய சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் இருந்தும் எடுத்தாண்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஆங்கிலம் மட்டுமின்றி மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில் கலந்திருக்கின்றன. 'பஜாரி'என்ற சொல் உருது மொழியில் இருந்து உருவானது. உருதுவில் பஜார் என்றால் சந்தை என்று அர்த்தம். இதனால் சந்தைக்கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள். ஆனால் பஜாரன் என்று ஒரு சொல் இல்லை. ஆக இதிலும் ஆணாதிக்கம் இருந்திருக்கிறது என்பதை கவனிக்கவும். பேக்கு என்பது கூட உருதுவில் இருந்து வந்ததுதான். பேவ்கூஃப் என்றால் உருது மொழியில் முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள் இந்த பேவ்கூஃபைத் தான் சுருக்கி பேக்கு என்று ஆக்கிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு மொழியியல் வரலாறே இருக்கிறது.
சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை நாடறியச் செய்த பெருமை தமிழ் திரையுலகிற்கு உண்டு. எம்.ஆர். ராதா, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன் தொடங்கி லூஸ் மோகன், கமலஹாசன் வரை பலரும் இந்த பாஷையைப் பேசி இதன் பெருமையை பறைசாற்றி இருக்கிறார்கள். 'வா வா வாத்யாரே ஊட்டாண்ட..'என்ற மெட்ராஸ் பாஷை பாடல் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் அலறியது.
ஜெயகாந்தன் போன்றவர்கள் இதே பணியை எழுத்து மூலம் செய்திருக்கிறார்கள். ஜெயகாந்தனின் 'சினிமாவுக்கு போன சித்தாளு'பேசிய பல சொற்கள் இன்று வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. ஆனால் இன்றும் அந்த சித்தாள் நமது நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறாள்.
தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் வேகமும், ஒலிநயமும்தான். 'அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்ஸா'போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும் அந்த ஓசைநயம் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல எவ்வளவு அரிய கருத்தையும் பாமரனுக்கும் புரியும் வகையில் பந்தி வைக்கவும் இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பது இதன் கூடுதல் பலம்.
சென்னைத் தமிழ் | பொருள் | |
இருக்கிறாய் | கீறே | இருக்கிறாய். |
இருக்கிறது | கீது | இருக்கிறது |
இழுத்துக்கொண்டு | இஸ்துகினு | இழுத்தல் |
கூட்டிக்கொண்டு | இட்டுகினு | அழைத்துக் கொண்டு |
அப்புறம் | அப்பாலே | பிறகு |
கிழித்துவிடுவேன் | கீசீடுவேன் | கிழித்துவிடுவேன் |
உட்காருங்கள்\ | குந்திகோ | அமரவும் |
கிண்டல் பண்றே | கலாய்க்கறே | கேலி செய்தல் |
அங்கே | அந்தாண்ட | அங்கு |
ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும் இன்று பேசப்படும் பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து தற்போது அந்த இடத்தில் ஃபீல் பண்ணி, செக் பண்ணி, டிபன் பண்ணி என நிறைய பண்ணிவிட்டார்கள். ஆனாலும் புதுப்புது சொற்களை அப்படியே அல்லது சற்று நமது வசதிக்கேற்ப உருமாற்றி பயன்படுத்துவது என்ற பாரம்பரியம் மட்டும் இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீதுபா!