வட்ட வடிவிலான, மிருதுவான, வெள்ளைநிறத்தில் ஆவி பறக்க அமர்திருக்கும் பிரியமான இட்லிகளியே பார்த்து பழகிய எனக்கு அவைகளை சதுர வடிவில் பார்க்கும் ஆசை உண்டானது இங்கு நான் வந்தபிறகுதான்.
வந்த சில மாதங்களாக வேலையில் முழு கவனமும் செலுத்த வேண்டிய கட்டாயம். எனக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆள் இல்லாததால் ( இங்கு முன்னர் இருந்த ஒருவர் என் தலை கண்டவுடன் தம் நாட்டிற்க்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனது ஒரு தனி கதை ) அந்த காலங்களில் சாப்பாட்டிற்கு அருகில் இருக்கும் ரெஸ்டாரென்ட் மற்றும் உணவு விடுதிகளே கதியாய் போனேன். இங்கு வெளியில் சாப்பிட ஆரம்பித்தால் கையில் காசு மிஞ்சாது என்று உணர்தேன். நண்பர்களும் சமையல் செய்வதே சிறந்தது என்று மேலும் "ஊற்றிவிட்டனர்." மேலும் அதிகமான எண்ணையும் , மசாலா காரமும் எனக்கு வேண்டுவதில்லை.
பார்த்தேன்,சென்ற மே மாதம் இறுதியில் வந்தது வரட்டும் என்று காரியத்தில் இறங்கி விட்டேன். அருகில் வேண்டியவைகளை வாங்கிக்கொள்ள பிருமாண்டமான லு லு ஹைபர் மார்கெட் வேறு இருப்பதால் வேலைகள் எளிதாய் போனது. ஒருநாள் மார்கெட்டை சுற்றி வரும்போது கிச்சன் உபகரணங்கள் உள்ள பகுதிக்கு என்னையும் அறியாமல் சென்று பொறுமையாக பார்த்துக்கொண்டு வந்தேன். இந்த சேல்ஸ் மென் களுக்கும் சேல்ஸ் கேள்ஸ் களுக்கும் ஆட்களை மயக்கும் வித்தை எப்படித்தான் கை வந்ததோ! பிரலமான கம்பெனியின் ரைஸ் குக்கர் ஒன்ற நோட்டம் விட்டுகொண்டிருந்த என்னை அதனையே வாங்கவும் வைத்தனர். ரைஸ் குக்கரின் பாத்திரத்தில் சாதம் சமைக்கவும் அதற்கு மேலே வைக்கபடும் ட்ரே ஒன்றில் காய்கறிகள் வேகவைக்கவும் இடமிருக்கும் அல்லவா. பிடித்துப்போனது வாங்கி வந்து விட்டேன். பிறிதொரு நாளில் தேவையான மற்ற பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்கள் என என் ரூமே சிறிய பெட்டிகடையாக மாறிப்போனது.
சமையலும் ஆரம்பித்துவிட்டேன்.எனக்கு நம்ம ஊர் காய்கறிகள் என்றால் மிகுந்த ஆர்வம். இங்கு சுண்டைகாயும், முருங்கைகாயும், முள்ளு கத்தரிகாயும்,கீரைகளும் கொத்தவரை, வெண்டை , அவரை,வாழை, மாங்காய் ஷல்கம், கோசு , காலி பிளவர் , பீன்ஸ் மற்றும் தேங்காய் கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, வகை வகையாக பாசுமதி,தஞ்சாவூர் பொன்னி என வேண்டியவைகள் கிடைக்க வேறு என்ன வேண்டும். அதெல்லாம் சரி, டிபனுக்கு இட்லி பண்ண வேண்டும் என ஆசை வந்து விட்டது. தனியாக இட்லி பானை எல்லாம் வாங்க தோணவில்லை.
இட்லி மாவு கிடைப்பதால் வங்கி வந்து முதலில் காரியத்தில் ஈடுபட்டேன். அதில் கூறியிருந்த படி மாவையும் தண்ணீரையும் மிக்சியில் போட்டு கலந்து மாவை எடுத்து வைத்துவிட்டேன். அறையில் ஏ .சி. எப்போதும் ஓடிக்கொண்டிருபதால் மாவு புளிக்காமல் சண்டித்தனம் பண்ணியது. காலையில் ரூமிற்கு வெளியே வைத்தேன். இங்கு பூனைகள் அதிகம் எனவே அவைகள் சதி பண்ணாமல் இருக்க பாத்திரத்தை மூடி அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் நிறைய தண்ணீரை பிடித்து இறுக்கமாக மூடி வைத்து விட்டேன். மாலையில் வேலை முடிந்து முதல் மாடியில் இருக்கும் என் அறைக்கு செல்ல மாடிப்படிகளில் கால் வாய்த்த எனக்கு, சென்னையில் வீட்டின் அடுபங்கரையில் நடப்பதை போன்ற உணர்வு வந்தது. ஒன்றும் புரியாமல் மேலே செல்ல செல்ல விளங்கியது. காலையில் ரூமிற்கு வெளியில் புளிபதர்க்காக நான் வாய்த்த இட்லி மாவு பொங்கி வழிந்து மாவின் வாசம் எங்கும் பரவி நின்றது.
மகிழ்ச்சியுடன் "அப்படி வா வழிக்கு" என மாவினை எடுத்து வைத்து விட்டு சுத்தம் செய்து விட்டு இட்லி பண்ண தயாரானேன். முன்னரே இட்லி மிளகாய் பொடியும் புதிதாய் வாங்கிய மிக்சியில் சோதனை ஓட்டமாக அறைத்து வைத்து விட்டேன், மணக்க மணக்க பீன்ஸ் சாம்பாரும் ரெடி.
இனி இட்லி ஊற்ற வேண்டுமே! ரைஸ் குக்கரின் மேல் பாகத்தில் துளைகள் இருக்கும் பாத்திரத்தில் வெள்ளை துணியினை நீரில் நனைத்து போட்டேன்,பொங்கி பதமாக இருந்த மாவினை கலக்கிவிட்டு நாலு கரண்டிகள் எடுத்து ஊற்றினேன். கீழ் பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்து மேல இட்லி மாவு உள்ள தட்டை வைத்து மூடி குக்கரில் சுவிட்சை போட்டு விட்டு லேப்பியில் (லேப் டாப் தான்) பாடல்கள் கேட்டுக்கொண்டு அன்றைய நாள் தொடரான பிற வேலைகளை பார்த்தேன். அபோதெல்லாம் நெட் இணைப்பு இல்லை.
சில நிமிடங்களில் கம்மென்று இட்லி ஆவியில் வேகும் வாசனை ரூமை நிறைக்க, எழுந்து ஆவலுடன் மூடியை திறந்தேன். இட்லி உயர்ந்து எழும்பி வெந்து கொண்டிருந்தது. வட்டமான, ஆனால் நம் ஊர் தவளை ஆடை போல தடியாக உட்கார்ந்துகொண்டிருந்தது. துருவிய தேங்காய் வாங்கி கொண்டு வந்து ப்ரீசரில் வைத்தது நல்லதாய் போயிற்று .தேங்காய் சட்னிக்கு அரைத்தேன். ஆஹா..... எல்லாம் ரெடி. இனி இட்லியை வெளியில் எடுத்து அதனை துண்டுகளாக வேண்டும். இட்லியை தட்டில் எடுத்து போட்டு காய்கறி வெட்டும் கத்தியால் மைசூர் பாகு செய்து தட்டில் ஊற்றி வெட்டுவார்கள் நம் அம்மாக்கள் அது போல இட்லியை துண்டுகலாக்கினேன்.
அப்புறமென்ன?
நம்ம பதிவர் சமையல் அரசிகள் அனைவரும் வித விதமாக ரெசிப்பி எழுதி விட்டு அதற்கு பொருத்தமாக படங்களை வேறு போட்டு அசத்துகிரார்களே ?
நாங்களும் அசதுவமுள்ள? !
தேங்காய் சட்னி, மிளகாய் பொடி வித் இதயம் நல்லண்ணெய் அப்புறம் சாம்பார் வேறு. போதாது?? இரவு நேரங்களில் இட்லி கடை போடும் வழக்கம் இனி இங்கும் ஆரம்பித்துவிட்டது. பில்டர் காபி இல்லை அதற்கு ஈடாக நெஸ்கபே ரெட்மக் தான் கதி. இப்போதைக்கு இது போதும் மனமே! இட்லி வாழ்க , இட்லி பிரியர்கள் வாழ்க, பில்டர் காபி வாழ்க, வாழ்க வைய்யமெல்லாம்.